Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை கொடுங்கையூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உருவாக்கப்பட்ட தண்ணீரை, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடித்து அசத்தினார். இங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உடல்நலனுக்கு கேடு விளைவிக்காது என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கவே அவர் அந்த தண்ணீரை பருகியுள்ளார்.
சிங்கப்பூரைப் போன்று சென்னையில் எதிர் சவ்வூடு பரவுதல் முறையில், கழிவுநீரை சுத்திகரித்து மாற்றி அதனை பயன்படுத்தும் வகையில் கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய 4 இடங்களில் அதிநவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்காணிப்பில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் இணைந்து திட்டப்பணிகளை மேற்கொண்டன.
கொடுங்கையூரில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் முதல்கட்டமாக தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்த அதிகாரிகள், சுத்திகரிக்கப்பட்ட இந்த தண்ணீரை குடித்தால் உடல்நலனுக்கு கேடு கிடையாது என்று தெரிவித்தனர். இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருந்தபோது, அதனை கொடுங்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாங்கி குடித்தார்.